×

முரசொலி மீது காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்ட பொய்யுரையை கிழிப்போம் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை

சென்னை: முரசொலி மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சுமத்தப்பட்ட வீண் களங்கத்துக்கு விளக்கம் அளித்து பொய்யுரைப்போர் முகமூடியை கிழிப்போம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்புச் செயலாளரும், முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி எம்.பி., நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: விக்கிரவாண்டி இடைத் தேர்தலின்போது, பொதுமக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில், முரசொலி இடம் குறித்து செய்யப்பட்ட பொய்யான குற்றசாட்டை மறுத்து, திட்ட வட்டமாகவும் தெளிவாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே செய்தியாளர்கள் சந்திப்பிலும், குறிப்பாக திமுக பொதுக் குழுவிலும் அனைத்து ஆதாரங்களுடனும், ஆவணங்களுடனும் உரிய மன்றங்களில் கோரப்படும் பொழுது சமர்ப்பித்து, முரசொலி நாளிதழ் அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல என்பதை நிரூபிப்போம் என தெளிவாக எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில், முரசொலி நாளிதழ் அலுவலக இடம் குறித்த தவறான, பொய்யான, ஆதாரமற்ற  ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை திட்டமிட்டு,  அரசியல் உள்நோக்கத்தோடு, பாஜ பிரமுகர் ஒருவர் எவ்வித முகாந்திரமின்றி புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையம், வரும் 19ம்தேதி அன்று சென்னை, சாஸ்திரி பவனில் உள்ள ஆணையத்தின் முன்பு விளக்கம் அளிக்கும்படி கோரியுள்ளது.

ஆர்.கே.நகர் தேர்தலில் ₹89 கோடி கைப்பற்றிய பணத்தைப் பற்றி இதுவரை விசாரணை ஏதும் நடத்தாத மத்திய பாஜ அரசு, 2016 சட்டமன்ற தேர்தலின் போது, மூன்று கண்டெய்னர் லாரிகளில் கைப்பற்றப்பட்ட ₹560 கோடி குறித்தும் விசாரிக்காத பாஜ அரசு - தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வீட்டில் ரெய்டு செய்து கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரிக்கவில்லை. குட்கா விஜயபாஸ்கர் மீதுள்ள ₹40 கோடி ஆவணங்கள் குறித்து விசாரிக்காத பாஜ அரசு,  ஆண்டுகள் பல உருண்டோடியும், இவ்வாறான சட்டத்திற்கு புறம்பான செயல்கள் குறித்து விசாரணை ஏதும் செய்யவில்லை.
அதைப் பற்றி கவலை கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ள மத்திய பாஜ அரசு, தமிழக மக்கள் மத்தியில் திமுக மீது அவப்பெயரை ஏற்படுத்த வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு, பாஜ பிரமுகர் கொடுத்த புகாரினை, அவசரம் அவசரமாக, உடனடியாக எடுத்து விசாரணைக்கு அழைத்திருக்கிறது.

மத்திய பாஜ அரசின் கீழ் இயங்கும் தாழ்த்தப்பட்டவர்க்கான ஆணையம் கோரியுள்ள விளக்கத்தினை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில்,  வரும் 19ம்தேதி அன்று, முரசொலி அறக்கட்டளை அறங்காவலர்களில் ஒருவர் என்ற முறையில் நானும், திமுக வழக்கறிஞர்களும் தாழ்த்தப்பட்டவர்களுக்கான ஆணையத்தின் முன்னிலையில் ஆஜராகிறோம். அப்போது, முரசொலி நாளிதழ் அலுவலக இடத்தின் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சுமத்தப்பட்டுள்ள வீண் களங்கத்தை, உரிய விளக்கங்கள் அளித்து, அதன்மூலம்  பொய்யுரைப்போர், பொல்லாங்கு பேசுவோர் முகமூடியைக் கிழித்தெறிவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Murasoli , falsehood imposed , Murasoli, RS Bharathi Report
× RELATED தமிழ்நாட்டை ஏமாற்றிய மோடி, இப்போது...