சென்னை: மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவையை மேம்படுத்துவது குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். சென்னையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, கேப் சேவை செயல்பட்டு வருகிறது. இந்த சேவையை மாதம்தோறும் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஏஜி.டிஎம்எஸ் மற்றும் நந்தனம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிதாக சீருந்து இணைப்பு சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியது. தற்போது, 10க்கும் மேற்பட்ட நிலையங்களில் இந்த சேவை செயல்பட்டு வருகிறது. இந்த இணைப்பு சேவை ரூ.10 கட்டணத்துடன் ஒவ்வொரு ரயில் நிலையத்தில் இருந்தும் 6 முதல் 8 கி.மீ தூரம் வரையில் செயல்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஷேர் ஆட்டோ மற்றும் கேப் சேவைக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த சீருந்து சேவைக்கு கிடைப்பதில்லை என்று தலைமை அலுவலகத்திற்கு புகார் சென்றது. சென்ட்ரல், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் தினம்தோறும் 10 பேர் கூட இச்சேவையை பயன்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.