தண்டையார்பேட்டை: எர்ணாவூர் பஜனை கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மாலினி (32). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரை பிரசவத்துக்காக ராயபுரத்தில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த 11ம் தேதி சேர்த்தனர். அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை எடுக்க முடியும் என கூறியுள்ளனர். பின்னர், கடந்த 13ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் மாலினிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது, மாலினிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது உறவினர்கள், டாக்டர்களிடம் தெரிவித்தபோது, அலட்சியமாக பதில் கூறி அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாலினியின் உடல்நிலை மிகவும் மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு மாலினி பரிதாபமாக இறந்தார்.