ஆலந்தூர்: பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதையை பரங்கிமலை மெட்ரோ ரயில்வே நிர்வாகத்தினர் மணலை கொட்டி மூடினர். இதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, ஆலந்தூர் நிதிப்பள்ளி, மற்றும் பரங்கிமலை சுரங்கப்பாதை சர்வீஸ் சாலைக்கு செல்ல ஒரு வழித்தடம் இருந்தது. பொதுமக்கள் இதனை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்த வழித்தடத்தை மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் கடந்த ஆண்டு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மெட்ரோ ரயில்வே நிர்வாகம் அந்த வழித்தடத்தை மணலைக் கொட்டி மூடி விட்டனர். இதனால், நேற்று காலை பள்ளிக்கு செல்வோர் மற்றும் வேலைக்கு செல்வோர் பெரிதும் அவதிப்பட்டனர். இந்த திடீர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் வழக்கறிஞர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.