சேலம்: மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் மனைவி பழிவாங்கியே தீருவோம் என கூறியுள்ளதால், ஆதரவாளர்களை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த ராமமூர்த்தி நகரை சேர்ந்தவர் மணிவாசகம் (60). மாவோயிஸ்ட் இயக்க தலைவராக ெசயல்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 29ம் தேதி கேரளாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த 13ம் தேதி மணிவாசகத்தின் உடல் சேலத்திற்கு கொண்டுவரப்பட்ட நிலையில், சிறையில் இருந்த அவரது மனைவி கலா மற்றும் சகோதரி சந்திரா ஆகியோரின் வருகைக்காக, உடனடியாக தகனம் செய்யப்படவில்லை. இதனிடையே நேற்று முன்தினம் அவர்கள் பரோலில் வந்ததால், ராமமூர்த்தி நகர் சுடுகாட்டில் மணிவாசகத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது இறுதிச்சடங்கில், ஆதரவாளர்களும், கேரளாவில் இருந்து வந்த பலரும் கலந்து கொண்டு, அவருக்கு ஆதரவாக கோஷமிட்டனர். அப்போது, மணிவாசகத்தின் மனைவி கலா, “போலீசார் திட்டமிட்டு படுகொலை செய்துள்ளனர். 4 பேரின் சாவுக்கு காரணமானவர்களை பழி வாங்கியே தீருவோம்” என கணவரின் சடலுக்கு முன் நின்று சபதம் எடுத்துக்கொண்டுள்ளார்.