தமிழகத்திலேயே முதன்முறையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு இயந்திரம் பயன்படுத்தி வாக்காளர்கள் ஒரே நேரத்தில் 4 வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். தமிழகத்தில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. நகர்புறங்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். பிற மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளில் நடைபெறும் தேர்தலில் வாக்குபெட்டி-வாக்குசீட்டு முறையே இன்னும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக குமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் கிராம ஊராட்சி வார்டுகள், பேரூராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் என்று அனைத்து வார்டு உறுப்பினர், தலைவர் தேர்தலுக்கும் மின்னணு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. இதில் உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தபடவுள்ள, பல பதவி ஒரு தேர்வு (மல்டி போஸ்ட் சிங்கிள் சாய்ஸ்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான மின்னணு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கருவிகள் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் பெல் பொறியாளர்கள் மின்னணு இயந்திரகளை சரிபார்த்து தயார் நிலையில் வைத்துள்ளனர். மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர், 13 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 10 ஊராட்சி தலைவர், 114 ஊராட்சி உறுப்பினர் என மொத்தம் 138 பதவிகளுக்கு ஒரு வாக்காளர் 4 ஓட்டுகள்பதிவு செய்ய இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு 116 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும். இந்த வாக்குச்சாவடிகளில் சுமார் 456 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.