புதுடெல்லி: இணையதளங்களில் குழந்தைகளின் ஆபாச படங்கள் அதிகளவு இடம் பெறுகிறது. இதை தடுக்கவும், புலனாய்வு செய்யவும் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ, சிறப்பு பிரிவை தனது டெல்லி தலைமையகத்தில் துவக்கி உள்ளது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கூறியதாவது: இணையவழி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோக தடுப்பு-புலனாய்வு அமைப்பு’ என்ற புதிய அமைப்பை சிபிஐ.யின் சிறப்பு குற்றவியல் புலனாய்வு பிரிவு உருவாக்கியுள்ளது. இணையதளங்களில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்கள் பரவுவதை தடுக்க, இந்த பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.
ஆபாச படங்களை உருவாக்குவது, இணையதளங்களுக்கு அனுப்புதல், அத்தகைய படங்களை பார்த்தல் மற்றும் பதிவேற்றம் செய்பவர்கள் யார் என்ற விவரங்களை இந்த பிரிவினர் சேகரிப்பார்கள். குற்றம் செய்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது இந்திய குற்றவியல் சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டப் பிரிவு 2012, தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ன்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படும்.