புதுடெல்லி: ‘சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய மாறுபட்ட தீர்ப்பை மத்திய அரசு கண்டிப்பாக படித்து பார்க்க வேண்டும்,’’ என உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் அறிவுறுத்தி உள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதில், தலைமை நீதிபதி கோகாய், நீதிபதிகள் கான்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர், வழக்கை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாற்ற உத்தரவிட்டனர். மற்ற இரு நீதிபதிகளான நாரிமன், சந்திராசூட் ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். குறிப்பாக, நாரிமன் தனது தீர்ப்பில், ‘பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்வது அவர்களின் அடிப்படை உரிமையாகும். எனவே, உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். இதில் எந்த சமரசமும் செய்யப்படக் கூடாது’ என்று உத்தரவிட்டு, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்திருந்தார்.