மக்களின் செலவிடும் சக்தி சரிவு ஆய்வறிக்கையை மறைக்கும் அரசு : மோடி மீது ராகுல் குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாட்டில் மக்களின் செலவிடும் சக்தி கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடுமையாக குறைந்திருப்பதாக, ‘தேசிய புள்ளியியல் அலுவலகம்’ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அரசுக்கு எதிரான எதிர்மறையான கருத்துகள் இடம் பெற்று இருப்பதால், இந்த அறிக்கையை வெளியிடாமல் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இது பற்றி செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி இருக்கிறது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இதை சுட்டிக்காட்டி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த 2017-18ம் ஆண்டில் பொதுமக்களின் நுகர்வு சக்தி குறைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்பட்டு கடந்த ஜூன் 19ம் தேதி அன்று வெளியிடப்பட இருந்தது. ஆனால், அதில் அரசுக்கு பாதகமான அம்சங்கள் இருந்ததால் அந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்துவிட்டது. மோடி அரசின் பொருளாதார கொள்கையால் கடும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால்தான், தனது துறை நடத்திய ஆய்வறிக்கையை நிறுத்தி வைக்கும் அளவுக்கு மத்திய அரசு சென்றுள்ளது,’ என்று கூறியுள்ளார்.

ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜ நாடு தழுவிய போராட்டம்

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் உச்ச நீதின்றமே பிரதமர் மோடியை திருடன் எனக் கூறி விட்டதாக ராகுல் குற்றம்சாட்டி வந்தார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சீராய்வு மனு மீது நேற்று முன்தினம் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடக்கவில்லை,’என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், மோடியை திருடன் என குறிப்பிட்ட ராகுலுக்கும் கண்டனம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, மோடி பற்றி கூறிய கருத்துக்காக ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜ வலியுறுத்தி வருகிறது. மேலும், இதை வலியுறுத்தி பாஜ சார்பில் இன்று நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படுகிறது.

Related Stories: