ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு அமலாக்கத் துறையின் வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு : டெல்லி ஐகோர்ட் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்தது  டெல்லி உயர் நீதிமன்றம். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில்  தனித்தனியே வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதையடுத்து ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவர் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது. பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இருப்பினும், அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. ஏனெனில், சிபிஐ அதிகாரிகளை தொடர்ந்து ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இரண்டாவதாக அமலாக்கத் துறையும் அவரை கடந்த மாதம் 16ம் தேதி கைது செய்தது.  

இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக ஜாமீன் கேட்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த வாரம் ஒத்திவைத்திருந்தது. இந்த தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் நேற்று வழங்கினார். அதில் நீதிபதி, “பொருளாதார குற்றங்கள் சமூகத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது. மேலும், வழக்கின் தன்மை, அதன் விசாரணை நிலை, அதுசார்ந்த அமைப்பு திரட்டிய ஆதாரம் மற்றும் ஆவணங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ததில் வழக்கு விசாரணை என்பது முக்கிய கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது,’’ என்று கூறி, சிதம்பரத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.

‘ஜாமீன் தந்தால் மக்களிடம் தவறான எண்ணம் ஏற்படும்’

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமார் கெயிட் தனது தீர்ப்பில் மேலும் கூறுகையில், ‘‘வழக்கின் ஆதாரங்களை மனுதாரர் அழித்து விடுவார் என விசாரணை  அமைப்பு கூறுவதை நிராகரிக்க வேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை கண்டிப்பாக ஏற்க முடியாது. அதேபோல் வெளிநாடு தப்பி விடுவார் என்ற அமலக்கத்துறை வாதத்தையும் ஏற்க முடியாது. இருப்பினும், இதுபோன்ற பொருளாதார குற்ற வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவருக்கு தற்போதைய நிலையில் ஜாமீன் வழங்கினால், அது மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி விடும்,’’ என்றார்.

Related Stories: