சென்னை: முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் உள்ளதால், அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தொழில் முதலீடு செய்ய வரும்படி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் வாஷிங்டன் டிசியில் உள்ள வாட்டர் கேட் ஓட்டலில் அமெரிக்க-இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்தித்து, தமிழகத்திற்குதொழில் முதலீடுகள் பெறுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: அமெரிக்கர்களும், அமெரிக்க வாழ் இந்தியர்களும் இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள், குறிப்பாக தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று அழைப்பு விடுக்கவே இங்கே வந்திருக்கிறேன். தமிழ்நாடு இந்தியாவில் உள்ள மிகவும் முன்னேறிய மாநிலம் மட்டுமல்ல, இந்திய பொருளாதாரத்தில் இரண்டாவது பெரிய மாநிலம், முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம்.