சென்னை: நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அமமுகவில் இருந்து விலகி ஏராளமானோர் மாற்று கட்சிக்கு சென்றபடி உள்ளனர். டிடிவி.தினகரனை நம்பி வந்த பலரும் தலைமையின் நடவடிக்கையால் கட்சி கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்த்து வருகின்றனர். இதேபோல், சசிகலாவிற்கு மிகவும் நெருங்கியவரான புகழேந்தி, டிடிவி.தினகரன் மேல் உள்ள அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய்க்கழகமான அதிமுகவில் மீண்டும் இணையப்போவதாக அறிவித்தார். ஆனால், எப்போது அவர் அதிமுகவிற்கு மீண்டும் செல்கிறார் என்பது தெரியாமலேயே இருந்தது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 18ம் தேதி தமிழகம் திரும்பியதும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இணைப்பு விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த மாதம் சேலத்தில் அமமுகவில் அதிருப்தியில் உள்ளவர்களுடன் புகழேந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மண்டலத்தில் அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. இதில் டிடிவி.தினகரன் மேல் அதிருப்தியில் உள்ளவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதேபோல், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.,க்களான உமாமகேஸ்வரி, ஜெயந்தி பத்மநாபன், பார்த்திபன், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டவர்களும் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து புகழேந்தி கூறுகையில், ‘‘துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பிய பிறகு தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இணைப்பு விழாவில் ஆயிரக்கணக்கானோர் மீண்டும் அதிமுகவில் இணைகிறோம். அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகளும் கட்சியை விட்டு விலகி என்னுடன் இணைய உள்ளார்கள்’’ என்றார்.