சென்னை: சிலைகள் மீட்கப்பட்டது தொடர்பாக, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கைகள் குறித்து விசாரிக்க தனி குழுவை அமைக்கும்படி சிபிசிஐடிக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை கொரட்டூரை சேர்ந்த சேகர் ராம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல், நீதிமன்றத்தில் பல ஆதாரமற்ற தகவல்களை தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் பதவி நீட்டிப்பு பெற்றுள்ளார். கடந்த 2018ல் பொன்.மாணிக்கவேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2012 முதல் 2018ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தன் தலைமையிலான குழு 26 வழக்குகளை பதிவு செய்து 102 நபர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை 1,125 சிலைகளை மீட்டுள்ளதோடு, 1,106 சிலைகள் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவது தடுத்துள்ளதாகவும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலிருந்து 8 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த சிலைகள் உண்மையிலேயே கடத்தப்பட்ட சிலைகள்தானா என்பதற்கு எந்த சான்றுகளும் இல்லை என தெரிய வந்துள்ளது.