சென்னை: பதவி உயர்வில் இட ஒதுக்கீடு என்பது சட்ட விரோதம் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் அரசு பணிகளில் நியமனம் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படுகிறது. இதேபோல் பதவி உயர்வுக்கும் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இந்த இட ஒதுக்கீட்டால் தங்களின் பதவி உயர்வு பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டை பின்பற்றும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பணி நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்றலாம். பதவி உயர்வில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது சட்டவிரோதமானது என்று கடந்த 2015ல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த 2016ல் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் (பணி நிபந்தனை) சட்டம் 2016 என்ற சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அதில், அரசு ஊழியர்களின் பதவி உயர்வும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நடத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக்கோரியும் தங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு வழங்குமாறு உத்தரவிடக்கோரியும் பெருந்துறையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராஜா, சென்னையை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.