நீட் தேர்வை ரத்து செய்ய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தை கூட்டி நீட் தேர்வை ரத்து செய்ய மசோதாவை மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்றிட மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப்படிப்பில் சேர்ந்தவர்களில் தனியார் பயிற்சி மையங்களில் படித்தவர்களே அதிகம். அதிமுக அரசு எந்த கருத்தும் சொல்லாமல் மவுனம் காப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசுக்கு ஒத்துழைத்து தமிழக மாணவர்களுக்கு எடப்பாடி இழைத்த துரோகம் போதும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 8 மருத்துவக் கல்லூரிகளில் நீட் பயிற்சி மையத்தில் சேராமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்த மாணவர்கள் ஒருவர் கூட இல்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3,200 மருத்துவ இடங்களில் 48 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் மருத்துவக் கல்வியில் சேர்ந்தவர்கள். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,650 சீட்டுகளில் 52 பேர் மட்டுமே நீட் பயிற்சி மையத்திற்குப் போகாமல் சேர்ந்துள்ளார்கள். இந்தத் தகவல்களை எல்லாம் தமிழக அரசே உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தெரிவித்துள்ளது.

மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவை சிதைக்கும் நீட் தேர்வை தடுக்க இப்போதே அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: