×

கோயம்பேடு 100 அடி சாலையில் வாலிபரை தரதரவென இழுத்துச்சென்று செயின் பறிக்க முயன்ற பைக் ஆசாமிகள்

அண்ணாநகர்: கோயம்பேடு அருகே வாலிபரை தாக்கி, சாலையில் தரதரவென இழுத்துச் சென்று, செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற பைக் ஆசாமிகள், பொதுமக்கள் திரண்டதால் தப்பியோடினர். புழல் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (28). தனியார் கம்பெனி ஊழியர். இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டார். கோயம்பேடு மேம்பாலம் அருகே 100 அடி சாலையில் நடந்துவந்தபோது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேர், பிரேம்குமாரை வழி மறித்தனர்.

பின்னர், அவர் அணிந்திருந்த செயினை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட பிரேம்குமார் செயினை விடாமல் இறுக பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனால், ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், பிரேம்குமாரை தாக்கி, சாலையில் தரதரவென இழுத்துச்சென்றனர். இதனால் அவரது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இவரது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் திரண்டதால், பைக் ஆசாமிகள் தப்பியோடினர். படுகாயமடைந்த பிரேம்குமாரை பொதுமக்கள் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பிரேம்குமார் கொடுத்த புகாரின்படி, கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : Chain bike enthusiasts ,Coimbatore ,road , Chain bike enthusiasts, pull a young man, 100 feet road in Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...