சென்னை: சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களில் கேலிகளும், பிரிவினைகளின் பிரதிபலிப்பும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. அங்கு நடக்கும் தற்கொலைக்கும், இதற்கும் சம்பந்தப்படுத்தக்கூடாது. நாடு முழுவதும் நடக்கும் ஒரு அவலம். அதன் பிரிதிபலிப்பாக இது இருக்கக்கூடும்.
பட வாய்ப்புகள் குறைந்து கொண்டு வருவதால் நடிகர்கள், அரசியலுக்கு வருவதாக முதலமைச்சர் தெரிவிக்கிறார். அவர் இதையே தொடர்ந்து கூறிக்கொண்டு இருப்பதால் அது உண்மையாக வேண்டிய அவசியம் இல்லை.
தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை நான் வழி மொழிகிறேன். அதை தவிர வேறு வழி எனக்கு இல்லை. நல்ல தலைமைக்கு ஆளில்லை என்பது தான் வெற்றிடத்திற்கு காரணம். நல்ல தலைமைக்கு தகுதியானவர்கள் இருந்தார்கள் என்பது பொய் அல்ல. அதை மறுக்க முடியாது. இன்று இல்லை என்பது சொல்லி வருத்தப்படுவதில் பிரயோஜனம் இல்லை. உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் அறிவிக்கப்படும்.