15 தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் தகுதிநீக்க எம்எல்ஏக்கள் வெற்றி பெறுவது உறுதி

பெங்களூரு : கர்நாடாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மஜத-காங்கிரஸ்  எம்எல்ஏக்கள்  17 பேரில் 16 பேர் நேற்று முதல்வர் எடியூரப்பா தலைமையில்  பாஜவில் இணைந்தனர். கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ காரணமாக இருந்த காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் 17 பேரை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் தேர்தலில் போட்டியிடவும் தடைவிதித்தார். இதை எதிர்த்து 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதில், 17 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செல்லும் என்றும் இடைத்தேர்தலில் போட்டியிட தடையில்லை என்றும் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பாஜவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பெங்களூரு மல்ேலஸ்வரத்தில் உள்ள பாஜ தலைமையகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட ேமடையில் முதல்வர் எடியூரப்பா தலைமையில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரோஷன்பெய்க் தவிர மற்ற 16 பேரும் அக்கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர். இதையடுத்து எடியூரப்பா பேசுகையில், ‘‘16 பேரும் கூட்டணி ஆட்சி மீது அதிருப்தி அடைந்து  எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தபின், என்ன செய்வதென தவித்தபோது நான்  வாக்குறுதி அளித்தேன். அதன்படி, வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது  எனது கடமையாகும். பாஜ சார்பில் போட்டியிடும் அனைவரையும் வெற்றிபெற வைக்க  வேண்டிய பொறுப்பை நான் ஏற்கிறேன். எக்காரணத்தைக்கொண்டும் உங்களுக்கு நான்  துரோகம் செய்யமாட்டேன். பாஜ தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவோருக்கு  ஆதரவாக பணியாற்றி வெற்றி பெறவைப்பார்கள்’’ என்றார்.

13 தகுதி நீக்க எம்எல்ஏக்களுக்கு இடைத்தேர்தலில் போட்டியிட சீட்

டிசம்பர் 5ம் தேதி நடக்க உள்ள 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான  இடைத்தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிடும் 14 வேட்பாளர்கள் அடங்கிய முதல்  கட்ட பட்டியலை அக்கட்சியின் மேலிட தேசிய பொதுச் செயலாளரும், பாஜ தலைமை  அலுவலக பொறுப்பாளருமான அருண்சிங் நேற்று வெளியிட்டார். இதில் தகுதி நீக்க எம்எல்ஏ.க்கள் 13 பேரை பாஜ வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. சிவாஜிநகர் தொகுதியில் ரோஷன் பெய்க்குக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பாளர்களின் விவரம்  வருமாறு:  அதாணி-மகேஷ்கும்மட்டஹள்ளி. காகவாடா-ஸ்ரீமந்த்கவுடா பாட்டீல், கோகாக்-ரமேஷ் ஜார்கிஹொளி, எல்லாபுரா-ஷிவராம் ஹெப்பார், ஹிரேகெரூர்-பி.சி. பாட்டீல்,  விஜயநகர்-ஆனந்த்சிங், சிக்கபள்ளாப்பூர்-கே. சுதாகர்,  கே.ஆர். புரம்-பைரதி பசவராஜ், யஸ்வந்தபுரம்-எஸ்.டி. சோமசேகர், மகாலட்சுமி லேஅவுட்-கே. கோபாலய்யா, ஒசக்கோட்டை-எம்.டி.பி. நாகராஜ், கே.ஆர். பேட்டை-கே.சி. நாராயணகவுடா,  ஹுனசூரு-எச்.விஸ்வநாத் (இவர்கள் அனைவரும் தகுதி நீக்க எம்எல்ஏக்கள்) சிவாஜிநகர்-எம்.சரவணா.

Related Stories: