×

கேரளாவை போல் தமிழக பள்ளிகளிலும் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

சென்னை: கேரளாவை போல் தமிழக பள்ளிகளிலும், மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கேரளாவில் பள்ளி மாணவ மாணவிகள் தண்ணீர் குடிக்க வைக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு தண்ணீர் குடிப்பதற்கு என்றே பாடவேளைகளில் நேரம் ஒதுக்கி தண்ணீர் பருக வைக்கிறார்கள். இது அந்த மாநில மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேவேளையில் தமிழகத்தில் திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள கருங்குளம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் பாடவேளைகளில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. பள்ளிக்கு வரும் அனைத்து மாணவர்களையும் தண்ணீர் பாட்டிலை வீட்டில் இருந்து எடுத்து வரச்சொல்லி தண்ணீர் பெல் என்று பெல் அடித்து பாட வேளைகளில் தண்ணீர் அருந்துவார்கள்.

இதுகுறித்த செய்திகள் இணையதளங்கள் மற்றும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் சென்னை சாந்தோம் புனித பீட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா நடைபெற்றது. அதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சி.ஏ. படிப்புக்கு பயிற்சிகளும் இனி அரசு பள்ளிகளில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அத்துடன் கேரளாவைப் போல் தமிழகத்தில் உள்ள பள்ளிகளிலும் பாட வேளைகளில் மாணவர்கள் தண்ணீர் குடிக்க 10 நிமிடங்கள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார். மாணவர்கள் குடிநீர் அருந்தும் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு இத்திட்டத்தை கர்நாடகா அரசும் பின்பற்ற முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : schools ,Kerala Students ,Kerala , Kerala, Tamil Nadu Schools, Students, Water Bell, School, Education
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...