இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்த எதிர்க்கட்சித் தலைவர் மவுலான ஃபஸ்லர் ரஹ்மான் அழைப்பு விடுத்துள்ளார். இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் அரசுக்கு எதிராக 13 நாட்கள் நடத்த இருந்த உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டு தற்போது ’பிளான் - B’ என்று கூறி நாடு முழுவதும் போராட்டத்திற்கு ஜாமியத் உலமா இ இஸ்லாம் பாஸ்ல் கட்சித் தலைவர் மவுலானா அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதுகுறித்து புதன்கிழமை மவுலானா கூறும்போது, பிளான் - B திட்டப்படி நாம் நகரங்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள முக்கிய சாலைகளில் மறியல் செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்தை உள்ளூர்வாசிகள், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கு எந்தவித தொந்தரவு ஏற்படாதபடி நடத்த வேண்டும். மேலும் எங்களுக்கு அல்லாவின் ஆதரவு உள்ளது என கூறினார்.
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 30 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக இம்ரான் கான் அரசை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகவே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடந்த மாதம் இம்ரான் கான் ஆட்சிக்கு எதிராக ஆசாதி மார்ச் போராட்டத்தை எதிர்க்கட்சிகள் நடத்தின.இதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் எதிர்க் கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்பதாக இம்ரான் கான் தெரிவித்தார். இந்நிலையில் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.