தமிழகத்தின் 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கனமழை பெய்தது. இதனால், அணைகள், ஏரி, குளங்கள் முழுமையாக நிரம்பியது. இந்தநிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 2 செ.மீ., கடலூர், பாம்பன், கடலூர், பாம்பன், புதுச்சேரி, பாநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வரும் 16,17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் ஏதும் இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: