திருவண்ணாமலை: பழங்குடியின பள்ளி மாணவர்கள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலை ஜவ்வாது மலையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சார்பில் மாணவ நாடாளுமன்றம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் அத்திப்பட்டி கிராமம் அமைந்திருக்கிறது. இக்கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கல்வி மற்றும் அரசியல் அறிவை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டது. அதன் ஒருபகுதியாக மாணவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை அரசுக்கு எப்படி கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்து புரியவைக்கும் வகையில் மாணவ நாடாளுமன்றம் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் அரசியல் கட்சியினர் கதாபாத்திரங்களில் உரையாடினர். சபாநாயகர், அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் கதாபாத்திரங்களில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.