சேலத்தில் முதல்வர் வீடு அருகே பெண்ணிடம் கவரிங் நகை பறித்த பைக் ஆசாமிகள்

சேலம்: சேலம் நெடுஞ்சாலை நகர் பொன்னி தெருவை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மனைவி செல்வகுமாரி (43). இவர் நேற்று பிற்பகல் வீட்டு அருகே நடந்து சென்றபோது பைக்கில் இருவர் ஹெல்மெட் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி வந்தனர். அவர்கள் செல்வகுமாரி அணிந்திருந்த நகையை பறித்துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதுகுறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடு அருகிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளதால் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்களை பிடிக்க மாவட்டம் மற்றும் மாநகரம் முழுவதும் உள்ள போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அதன்படி வாகன தணிக்கையில் ஈடுபட்ட போலீசார் பைக்கில் ஹெல்மெட் மற்றும் டி-ஷர்ட் அணிந்தபடி வரும் நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனிடையே அந்த பெண்ணிடம் பறிக்கப்பட்டது  கவரிங் நகை என போலீசார் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: