தமிழகத்தில் வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பிவிட்டார் : கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் மும்பை புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் வரும் 17ம் தேதி சென்னையில் நடக்க உள்ளது. அதில், எத்தனை இடங்களில் போட்டியிடுவது, எத்தனை இடங்கள் கேட்பது, காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள பகுதிகள் என்னென்ன என்பது பற்றி ஆலோசிக்கப்படும். திமுக கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசி வருகின்றனர். ஆனால் நாங்கள் இன்னும் சந்திக்கவில்லை. காரணம், நானும் திமுக தலைவர் ஸ்டாலினும் பிசிராந்தையர்-கோப்பெரும் சோழர் போல் ஒருவரையொருவர் பார்க்காமலேயே பல விஷயங்களை பேசிக் கொள்வோம்.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது மிகப்பெரிய தவறு. சிவசேனா ஆட்சி அமைத்து விடும் என்ற பயத்தில்தான் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் தற்போது வெற்றிடம் என்று எதுவும் இல்லை. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மிக பெரிய வெற்றியின் மூலம் அந்த வெற்றிடத்தை திமுக தலைவர் ஸ்டாலின் முழுமையாக நிரப்பிவிட்டார். அயோத்தி தீர்ப்பை பொறுத்தவரையில் இஸ்லாமியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, தீர்ப்பை காங்கிரஸ் வரவேற்றது. காங்கிரஸ் வரவேற்காமல் இருந்திருந்தால் இந்தியாவில் ரத்த ஆறு ஓடி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: