திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள மலை மீது ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்றுவது வழக்கம். அதன்படி வரும் டிசம்பர் 10ம்தேதி இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த மலை மீது ஏறுவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை மீது செல்வது, ஹெலிகேம் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை தொடர்ந்து நடந்து வருகிறது. திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தடையை மீறி மலை ஏறுவதை தடுக்க வனத்துறையினர் ரமணாஸ்ரமம் அருகிலும், மலைமீது உள்ள முளைப்பால் தீர்த்தம், கந்தாஸ்ரமம் ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.