அனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் வாய்ப்பு: ஆட்சியில் சமபங்கு என்று சிவசேனா புதிதாக நிபந்தனை விதித்தது...அமித்ஷா பேட்டி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனா விதிக்கும் நிபந்தனை ஏற்கத்தக்கதல்ல என மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 288  சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம்  21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து  போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ்  54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின.

பாஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை தங்களுக்கு தர  வேண்டுமென்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்ததால், ஆட்சி அமைக்க விருப்பமில்லை என பாஜ அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு 24 மணி நேர கெடு விதித்து ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள சிவசேனா, பாஜ உடனான கூட்டணியை  முறித்துக் கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்தது.

ஆனால், ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அவ்விரு கட்சிகளும் எந்த உறுதியான முடிவையும் தெரிவிக்காததால், சிவசேனாவால் போதிய எம்எல்ஏக்கள் பலத்தை காட்ட முடியவில்லை. அதற்காக, கூடுதல் அவகாசம் கேட்டது. அதற்கு மறுத்து  விட்ட ஆளுநர் கோஷ்யாரி, 3வது பெரிய கட்சி என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரசுக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு தேவையான எம்எல்ஏ.க்களின் ஆதரவை காட்ட நேற்றிரவு 8.30 மணி வரை  கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே, மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

அடுத்த 6 மாதத்திற்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி தொடரும். அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்தலாம். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு  வந்துள்ளது. இதற்கிடையே, ஆளுநர் தங்களுக்கு போதிய அவகாசம் அளிக்காததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் தனியார் தொலைகாட்சி நேர்காணலில் பேசிய பாஜக தலைவர் அமித்ஷா, ஆட்சியில் சமபங்கு என்று சிவசேனா புதிதாக நிபந்தனை விதித்ததாக அமித்ஷா குற்றம்சாட்டினார். தேவேந்திர பாட்நாவிஸை முதல்வராக ஆக்குவதாக  கூறியபோது சிவசேனா அதனை எதிர்க்கவில்லை. ஆட்சியில் சமபங்கு என்பதையும் பாரதிய ஜனதா கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளுக்கும் 18 நாட்கள் வாய்ப்பு வழங்கப்பட்டது.  பெரும்பான்மை உள்ள எந்த கட்சியும் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என்றார்.

Related Stories: