புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ்.மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக திஹார் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் நீட்டித்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிபிஐயைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் அவரை கைது செய்து விசாரணை நடத்தியது. முதலில் கடந்த 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 7 நாட்கள் விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதி தரப்பட்டது.
அமலாக்கத்துறை கோரிக்கை ஏற்பு
இந்த நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவல் நேற்றோடு முடிவடைந்ததால் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும். ஆனால் ப.சிதம்பரம் தரப்பில் நீதிமன்றத்தில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டது. அதில்,உடல்நிலையை கருத்தில் கொண்டு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனை நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. இதையடுத்து ப.சிதம்பரம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதி உத்தரவில், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை தரப்பின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. அதனால் ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் அதாவது நவம்பர் 27ம் தேதிவரை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிடுகிறது என தெரிவித்தார்.