×

தகவல் அறியும் உரிமை சட்டம் தலைமை நீதிபதி அலுவலகத்துக்கும் பொருந்தும்: டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்!

புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டம் தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் எனக்கூறியுள்ள உச்சநீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

வழக்கு விவரம்

கடந்த 2017ல் தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் சுபாஷ் சந்திர அகர்வால், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக்கள் குறித்த விவரம் வேண்டும் என்று தகவல் ஆணையத்திடம் கேட்டு இருந்தார். இதற்கு உச்சநீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பான தகவலை எல்லாம் பதிலாக தர முடியாது என்று கூறப்பட்டது. இதையடுத்து சுபாஷ் மத்திய தகவல் ஆணையத்தை அணுகினார்.

இதற்கு தகவல் ஆணையம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வருகிறது. அதனால் சுபாஷுக்கு தேவையான தகவலை அளியுங்கள் என்று கூறியது. அவர் கேட்கும் தகவலை கொடுக்கலாம் என்று உச்சநீதிமன்றத்திற்கு தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை ஒரு நீதிபதி அமர்வு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்தது.

உயர்நீதிமன்ற தீர்ப்பு

அப்போது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் வருவார்,  என கடந்த 2010, ஜனவரி 10ம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், நீதித்துறை சுதந்திரம் என்பது ஒரு போதும் நீதிபதியின் தனியுரிமையை பாதிக்காது, என்று கூறப்பட்டது. இது உச்சநீதிமன்றத்திற்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

மேல்முறையீடு

இந்த தீர்ப்புக்கு அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்ற பதிவாளர், அதன் மத்திய பொது தகவல் துறை அதிகாரி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ரமணா, சந்திரசூட், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. கடந்த ஏப்ரல் 4ம் தேதி வழக்கு விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில், இதன் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

பரபரப்பு தீர்ப்பு

இந்த நிலையில், இன்று இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதாவது தகவல் அறியும் உரிமை சட்டமானது தலைமை நீதிபதிக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன்மூலம் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது, உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளது. ஆனால், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், டி.ஒய்.சந்திரசூட், தீபக் குப்தா, ஆகிய 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பு வழங்கியதாகவும், மேலும் நீதிபதிகள் என்வி ரமணா, சஞ்சீவ் கண்ணா ஆகிய 2 நீதிபதிகள் சட்ட வரம்புக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.


Tags : Office ,Chief Justice: Supreme Court ,Delhi High Court ,Chief Justice ,Office: Supreme Court , Right to Information Act, Chief Justice's Office, Delhi High Court, Judgment, Supreme Court
× RELATED அமலாக்கத்துறை கைது செய்ததற்கு எதிரான...