மும்பை: மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தியிருப்பதை சாதகமாக்கிக் கொண்டு பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் 288 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 21ம் தேதி நடந்தது. இதில், கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும், காங்கிரஸ் 44 இடங்களையும் கைப்பற்றின.
பாஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சிஅமைப்பதற்கான பெரும்பான்மை பலம் இருந்தும், முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பங்கிட்டு கொள்ளும் விவகாரத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால், ஆட்சி அமைக்க விருப்பமில்லை என பாஜ அறிவித்தது. இதைத்தொடர்ந்து 2வது பெரிய கட்சியான சிவசேனாவுக்கு 24 மணி நேர கெடு விதித்து ஆட்சி அமைக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள சிவசேனா, பாஜ உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்தது.
ஆனால், ஆளுநர் விதித்த கெடுவுக்குள் அவ்விரு கட்சிகளும் எந்த உறுதியான முடிவையும் தெரிவிக்காததால், ஆளுநர் கோஷ்யாரி, 3வது பெரிய கட்சி என்ற அடிப்படையில், தேசியவாத காங்கிரசுக்கு நேற்றிரவு 8.30 மணி வரை கெடு விதித்து நேற்று முன்தினம் அழைப்பு விடுத்தார். இதையேற்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று மாலை அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அடுத்த 6 மாதத்திற்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி தொடரும். அதன்பிறகு மீண்டும் தேர்தலை நடத்தலாம். ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து கடந்த 20 நாட்களாக மகாராஷ்டிராவில் நிலவி வந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அழைப்பு விடுத்தது சரிதான் என்றும் ஆனால், அடுத்தடுத்து ஆளுநர் எடுத்த முடிவுகள் கவசர முடிவு என்றும் கூறினார். மகாராஷ்டிராவில் திடீரென குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது பிற கட்சி உறுப்பினர்களை தன்வசம் இழுக்க பாரதிய ஜனதா கட்சியின் குதிரை பேர திட்டத்திற்கு வழிவகுக்கும் என்று திக்விஜய்சிங் குற்றம்சாட்டியுள்ளார்.