×

தெலங்கானாவில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல்: அனைத்தும் பழைய ரூ.500, 1000 நோட்டுகள்!

ஐதராபாத்: தெலங்கானாவில் கட்டுக்கட்டாக ரூ.100 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள சத்திப்பள்ளி பகுதியை சேர்ந்த மாதர் என்பவர் தலைமையில் செயல்படும் குழுவினர் ரூ.80 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் கள்ள நோட்டுக்கள் கொடுக்கப்படும் என்று கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளனர். இதற்காக ரூ.2000 மதிப்புள்ள கள்ளநோட்டுகளை அச்சிட்ட அந்த கும்பல் மேலும் கீழும் ஒரிஜினல் 2000 ரூபாய் நோட்டுகளை வைத்து பண்டல்களை தயார் செய்துள்ளதாக தெரிகிறது.

பின்னர் அவற்றை வீடியோ எடுத்து ஒரிஜினல் நோட்டுகளுக்கு பதிலாக கள்ள நோட்டுக்களை வாங்கிக் கொள்ள விருப்பம் தெரிவித்தவர்களுக்கு காண்பித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, சத்திப்பள்ளி எனும் பகுதியில் ஒருவரை ஏமாற்றி கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றபோது கள்ள நோட்டு கும்பலை சேர்ந்த சிலரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கள்ளநோட்டுகளை அச்சிட பயன்படுத்திய வீட்டை சோதனை செய்த போலீசார், அங்கிருந்து ரூ.2000 மதிப்பு கொண்ட 7 கோடி ரூபாய்க்கான கள்ள நோட்டுக்களை பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, மாதர் மற்றும் அவருடைய குழுவை சேர்ந்த மேலும் 6 பேரை கைது செய்து போலீசார் நடத்திய விசாரனையில், அவர்கள் கம்மம் மாவட்டம் மன்சூரு மண்டலத்தில் உள்ள மர்லபாடு கிராமத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து அந்த வீட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள புழகத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ரூ500, 1000 ஆகிய கள்ள நோட்டுக்களை ஏற்கனவே அச்சிட்டு பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், அங்கு சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500, 1000 ஆகிய கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



Tags : Telangana ,Rs. , Telangana, counterfeit note, confiscation
× RELATED காதலனை திருமணம் செய்து கொண்டதால்...