×

பாலியல் புகார் வழக்கில் கைதான சமூக செயற்பாட்டாளர் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கரூர் பெண் அளித்த பாலியல் புகாரில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலையைச் சேர்ந்தவர் முகிலன் (எ) சண்முகம் (53). சமூகப்போராளியான இவர், இயற்கை வள பாதுகாப்பு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல சமூக பிரச்னைகளில் தீவிரமாக செயல்பட்டார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சென்னையில் கடந்த பிப். 15ல் பேட்டியளித்த அவர், அதன் பின்னர் மாயமானார். இதுதொடர்பான ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், முகிலன் மாயமான வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியது.

இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தியதாக, குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் முகிலன் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனிடையே, கடந்த ஜூலை 6ம் தேதி திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை, சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் அவர் மனு செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதி, மாயமான காலக்கட்டத்தில் எங்கிருந்தார் என்பது தொடர்பாக முகிலன் தரப்பில் அபிடவிட் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. புகார் அளித்த பெண் தரப்பில், முகிலனுக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முகிலன் தரப்பில் அபிடவிட்  தாக்கல் செய்யப்பட்டது. அப்போது அரசுத் தரப்பில், தலைமை குற்றவியல் வக்கீல் ஆஜராக வேண்டியிருப்பதால் அவகாசம் வேண்டும் என கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை இன்றைய தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் முகிலனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் முகிலன் கரூர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் 3 நாட்களுக்கு ஒரு முறை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.


Tags : Mukhilan ,Icort Branch , Sexual Complaint, Mukhilan, Conditional Bail, Icort Branch
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...