எலி மருந்து குடித்து பெண் எஸ்ஐ தற்கொலை முயற்சி

விருதுநகர்: விருதுநகரில் பெண் எஸ்ஐ, எலி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு குடும்ப பிரச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையைச் சேர்ந்தவர் சரண்யா (28). இவர் 2 மாதங்களுக்கு முன், விருதுநகரில் மாவட்ட எஸ்பி அலுவலகத்தின் மேல் மாடியில் செயல்பட்டு வரும் மாவட்ட கைரேகை பிரிவில் எஸ்ஐயாக பணிபுரிந்தார்.  இவர், நேற்று காலை சூலக்கரையில் உள்ள வீட்டில் எலி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக குடும்பத்தினர் அவரை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து எஸ்ஐ சரண்யாவின் கணவர் ராஜாராம் கூறுகையில், ‘‘சரண்யாவுக்கும், தாய்மாமாவான எனக்கும் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. யூகேஜி படிக்கும் பெண் குழந்தை உள்ளது. எனது மாமியார் வீட்டில் தங்கி குழந்தை படித்து வருகிறது. எம்எஸ்சி, பிஎட் படித்துள்ள சரண்யா ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்ற ஆசையில் உள்ளார். இதற்காக சென்னை பயிற்சி மையத்தில் படித்தார். போலீஸ் எஸ்ஐ தேர்வு எழுதியதில் தேர்வாகி 6 மாத பயிற்சிக்கு பிறகு, விருதுநகர் மாவட்ட கைரேகை பிரிவில் 2 மாதங்களுக்கு முன் எஸ்ஐயாக சேர்ந்தார். ஐஏஎஸ் கோச்சிங்கிற்கு மதுரை செல்ல வேண்டிய நிலையில், மாற்றல் கோரி எஸ்பியிடம் மனு அளித்துள்ளார். இந்நிலையில், தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்’’ என்றார். சரண்யா குடும்ப பிரச்னையால் மருந்து குடித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: