வால்பாறை: வால்பாறை அருகே சிறுத்தை ஒன்று பாலத்தின் மீது அமர்ந்து ஒய்வெடுப்பதை கண்ட பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தொடர்ந்து சிறுத்தை அட்டகாசம் செய்து வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர பொது மக்கள் பெரும் அச்சப்படுகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு வால்பாறை - பொள்ளாச்சி சாலை காமராஜ் நகர் அருகே பொதுப்பணித்துறை குடியிருப்பு செல்லும் வழியில் உள்ள பாலத்தில் சிறுத்தை ஒன்று அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் சிலர் அதனை படம் பிடித்தனர். தொடர்ந்து நகராமல் அமர்ந்திருந்த சிறுத்தை வெளிச்சம் பட்டவுடன் குதித்து அங்கிருந்து தப்பி ஓடியது.