கொடுங்கையூர், மணலி பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு 2 சிறுவர்கள் பலி: தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி

பெரம்பூர் : கொடுங்கையூரில் மர்ம காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடரும் உயிரிழப்பால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.சென்னை கொடுங்கையூர் சின்னாண்டி மடம், கடும்பாடி அம்மன் கோயில் 4வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து (34). டிரைவர். இவரது மனைவி இந்திராதேவி. தம்பதியின் மகன் சபரி சரண் (7), மகள் கனிஷ்கா (5). கடந்த 5 நாட்களாக கனிஷ்காவிற்கு காய்ச்சல் இருந்தது. இதனால், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். நேற்று காய்ச்சல் அதிகரிக்கவே உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் சிறுமி பரிதாபமாக பலியானாள். இதனை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர்.இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், “கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து அதிகளவில் கொசு உற்பத்தியாகி சுற்றுப்பகுதி வீடுகளுக்கு படையெடுப்பதால், நோய் பாதிப்பில் தவித்து வருகிறோம். இதுகுறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.

உயிரிழந்த கனிஷ்கா வீட்டின் பின்புறம் மைதானமாக உள்ளது. அந்த இடத்தில் கழிவுநீர் தேங்கி குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள பல குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் வந்து ஆங்காங்கே உள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த கனிஷ்காவின் அண்ணன் சபரி சரணுக்கும் தற்போது காய்ச்சல் அதிகமாகி மாதவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். ஆனாலும், அதிகாரிகள் இந்த பகுதியில் சுகாதார பணிகளை மேற்கொள்ளவில்லை,” என்றனர்.திருவொற்றியூர்: மணலி புதுநகர் அருகே வெள்ளிவாயல் பகுதியை சேர்ந்தவர் ராமானுஜம். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அனுசுயா. இவர்களது மகன் ரஞ்சன் (12). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த வாரம் ரஞ்சனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பார்த்தனர். ஆனால் அங்கு அவருக்கு சரியாகவில்லை. இதையடுத்து நேற்று முன்தினம் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

விழிப்புணர்வு இல்லை தொடர்ச்சியாக காய்ச்சல் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு  மருத்துவமனையில் ரத்த பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும். தாமதம் செய்யவோ, அலட்சியம் செய்யவோ கூடாது, என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால், அடித்தட்டு மக்கள் வசிக்கும் இதுபோன்ற பகுதிகளில் இந்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாததால், உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது. எனவே, காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் அதிகாரிகள் முகாமிட்டு, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்க வேண்டும், என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி 4வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் மர்ம காய்ச்சலால் சிறுவர்கள் இறப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 7ம் தேதி பெரம்பூர் ரமணா நகரை சேர்ந்த ஜோஸ்வா என்பவரின் மகள் ஜெனோபா லில்லி (8) மர்ம காய்ச்சலால் உயிரிழந்தாள். கடந்த மாதம் 12ம் தேதி வியாசர்பாடி பிவி காலனியை சேர்ந்த பிரேம்குமார் ஜீவிதா தம்பதியின் மகன் சாய் தர்ஷன்  உயிரிழந்தான். இதை தொடர்ந்து தற்போது கனிஷ்கா என்ற சிறுமியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிப்பு உள்ள பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: