திருவனந்தபுரம்: கேரள மாநிலம், திருவனந்தபுரம் வஞ்சியூர் அருகே பால்குளங்கரை பகுதியில் ஒரு மனமகிழ் மன்றம் செயல்படுகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மது அருந்துவதும், செஸ், கேரம் ேபான்ற விளையாட்டுகள் விளையாடுவதும் வழக்கம். நேற்று முன்தினம் அங்கு கர்ப்பமாக இருந்த ஒரு பூனை இறந்த நிலையில் கயிற்றில் கட்டி தொங்க விடப்பட்டிருந்தது.
இதுகுறித்து பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தை சேர்ந்த லதா இந்திரா, பார்வதி மோகன் ஆகியோருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு சென்று பூனையை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டனர். தொடர்ந்து விசாரித்தபோது அங்கு மது அருந்த வந்தவர்கள் பூனையை கொன்று கட்டி தொங்க விட்டது தெரியவந்தது.இது குறித்து பார்வதி மோகன் வஞ்சியூர் போலீசில் புகார் செய்தார். ஆனால், போலீசார் வழக்கு பதியவில்லை. இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, போலீசார் வழக்கு பதிவு செய்து பூனையின் உடலை கைப்பற்றி கால்நடை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.