நில தகராறில் விபரீதம் தாய் மாமனுக்கு அரிவாள் வெட்டு: தலைமறைவான 2 பேருக்கு வலை

புழல்: புழல் அருகே நில தகராறில் தாய் மாமனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர். புழல் அடுத்த காரனோடையை சேர்ந்தவர் சம்பத் (50). விவசாயி. இவரது தங்கை மலர். இவருக்கும், சம்பத்துக்கும் நில தகராறு இருந்தது. இந்நிலையில் நேற்று சம்பத் அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது தங்கை மகன் தினேஷ் (20) என்பவர் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சம்பத்தை வழிமறித்துள்ளார். பின்னர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரது கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். இதை பார்த்ததும் தினேஷ் மற்றும் அவரது நண்பர் அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகினர். பின்னர் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய சம்பத்தை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சோழவரம் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் வழக்கு  பதிவு செய்து தினேஷ் மற்றும் அவரது நண்பரை வலைவீசி தேடி வருகிறார்.

Related Stories: