சென்னை: சென்னை, கோயம்பேட்டில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளது. இங்கு, திமுக அமைப்பு செயலாளரும், ராஜ்ய சபா எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, உள்ளாட்சி மன்றத் தேர்தலை தனித்தனியாக பிரித்து நடத்தக்கூடாது, ஒவ்வொரு வருவாய் கூட்டத்திற்கும் ஒரு அரசு அதிகாரியை நியமித்து கண்காணிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில தேர்தல் ஆணையரைச் சந்தித்துப் பேசினார். பிறகு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல், ஊராட்சி தேர்தல், அதன்பிறகு மாநகராட்சி, நகராட்சி என்று தனித்தனியாக தேர்தல் நடத்த ஆலோசனை நடப்பதாக தகவல் வருகின்றது. இதை எந்த காலகட்டத்திலும் ஏற்கமுடியாது. கிராம பஞ்சாயத்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் மாநகராட்சி தேர்தல் நடைபெறுமானால் நிறைய தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது.