×

பொன்.மாணிக்கவேல் அல்ல: பிரதமர் மோடி கோரிக்கையால் ஆஸ்திரேலியாவில் இருந்து சிலைகள் மீட்பு...உயர்நீதிமன்றத்தில் அரசு வாதம்

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். அவரை மேலும் ஓராண்டுக்கு சிறப்பு அதிகாரியாக நியமித்து சென்னை  உயர்நீதிமன்றம் பணி நீட்டிப்பு வழங்கியது. இந்த பணி நீட்டிப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவு செல்லும் என்றும், சிலை கடத்தல் வழக்குகளை  விசாரிக்கும் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் ஓராண்டு காலத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் நியமனம் செய்யப்பட்டது செல்லும் என்றும் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தீர்ப்பு வழங்கியதில் தெரிவித்தது.

சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்கலாம் என்றும், அந்த வழக்குகள் தொடர்பாக யாரையும் கைது செய்யும் அதிகாரம் அவருக்கு இல்லை என்றும், கடத்தல் வழக்கு தொடர்பான அறிக்கைகளை  இத்துறையின் உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிடம் பொன்.மாணிக்கவேல் தாக்கல் செய்யவேண்டும் என்றும், அந்த அறிக்கையின் மீது அதிகாரி அபய்குமார் சிங் முடிவெடுப்பார் என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.  

இதற்கிடையே, சிலைக் கடத்தல் வழக்குகளில் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு  தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலை கடத்தல் விசாரணை குறித்து பொன்.மாணிக்கவேல் தெரிவிப்பதில்லை. எந்த கூட்டங்களிலும்  பங்கேற்பதில்லை. எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை. வரும் 30ம் தேதியுடன் பொன்மாணிக்கவேலின் பதவிக் காலம் முடிவடைய உள்ளதால் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு  தொடர்ந்துள்ளதாகவும், அந்த வழக்கு வரும் 18ம் தேதி விசாரணைக்கு வர இருப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் வாதிட்டார்.

மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டதாக பொன்.மாணிக்கவேல் கூறிக் கொள்ளும் சிலைகள், அவரது முயற்சியால் மீட்கப்படவில்லை என்றும், யுரேனியம் கொள்முதல் செய்ய நடந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் மோடி விடுத்த கோரிக்கை அடிப்படையிலேயே, இந்தியாவிலிருந்து கடத்தப்பட்ட சிலைகள் திரும்பப் பெறப்பட்டதாகவும், பொன்மானிக்கவேல் விட்டதாக தவறான செய்திகளை பரப்புவதாகவும் தெரிவித்தார்.

தமிழக காவல்துறையில் சிறந்த அதிகாரிகள் இருக்கும் போது, ஒருவரை மட்டுமே சிறந்தவர் என்று கூற முடியாது என்றும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மீண்டும் புனரமைத்து ஆக்கப்பூர்வமாக செயல்பட வைக்க சிறப்பு அதிகாரி  பொன்மானிக்கவேல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நீதிபதிகள் வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Modi ,Australia , Statement of statues from Australia at the request of Prime Minister Modi ...
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...