தமிழகத்தில் நெருங்கும் உள்ளாட்சி தேர்தல்: நேர்மையான முறையில் நடத்த மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே,  உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி  தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இதையடுத்து வாக்காளர் பட்டியல் தயார் செய்வது மற்றும் வாக்குச்சாவடிகள் அமைப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில தேர்தல்  ஆணையம் வெளியிட்டது.

இதன்படி உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவுக்காக தமிழகம் முழுவதும் 92,771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. மேலும் வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஊரக பகுதிகளில் வாக்கு பதிவுக்கு 5 வண்ண வாக்குசீட்டு பயன்படுத்தப்படும்  என்றும், காலை 7 மணி முதல் மாலை 5 மணி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதைத்தவிர்த்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களில் செலவு கணக்கை தாக்கல் செய்வது,  கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த தமிழக அரசுக்கு மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது, தேர்தல் நடத்த வசதியாக  அரையாண்டு தேர்வை டிசம்பர் 23ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் மாநில தேர்தல் ஆணையருடன் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்  தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, உள்ளாட்சி தேர்தலை நேர்மையான முறையில் நடத்த தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திடம் திமுக கோரிக்கை வைத்துள்ளது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு  ஒன்றை அளித்தார். அதில், வாக்காளர்கள் ஆன்-லைனில் புகார் தெரிவிக்க வழிவகை செய்யுமாறும், உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்; உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார். கள்ள ஓட்டு போடுவதை தடுக்க பல்வேறு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள நடைமுறைகளை பின்பற்றி உள்ளாட்சி தேர்தலை நடத்துமாறும்  மனுவில் திமுக சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார். 

Related Stories: