உதகை: மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையிலான மலை ரயில் தண்டவாளத்தில் ராட்சத பாறை விழுந்ததால் இன்று ஒருநாள் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினசரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக அங்கு கனமழை பெய்து வருவதால் மலை ரயில் பாதையில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு கல்லார், ஹாடலி ஹில் குரோவ் பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஆர்டலி ஹில் குரோ ரயில் நிலையம் அருகே மண் சரிவு ஏற்பட்டு ராட்சத பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமானது. இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் புறப்பட்டு சென்ற மலை ரயில் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டது.