×

உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் போட்டியிடலாம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளிகளும் போட்டியிடலாம் என்று சட்ட திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று சட்டத்தில் இடம்பெற்றிருந்தது. இதேபோன்று தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை திருத்தம் செய்ய தமிழக முடிவு செய்தது. அதன்படி சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட முனிசிபல் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்யப்பட்டு சட்ட திருத்தம் கடந்த சட்டப்பேரைவில் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்தை செயல்படுத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையில் தமிழகத்தில் உள்ள வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையை உள்ளாட்சி தேர்தலிலேயே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பதவி காலம் இதுவரை 6 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை, மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Tamilnadu State Government Issue ,Local Government Elections ,government ,election ,persons ,Tamil Nadu , Local Elections, Disabled person, Competition, Government of Tamil Nadu, Government
× RELATED ஒன்றிய அரசு குறித்து அமெரிக்கா மீண்டும் விமர்சனம்