தமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை இல்லை : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: தமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை கேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கடையநல்லூர் எம்எல்ஏவும், வக்பு வாரிய உறுப்பினருமான அபுபக்கரின் கோரிக்கையை ஐகோர்ட் கிளை நிராகரித்தது.

வக்பு வாரியம் ??

வசதி படைத்த இஸ்லாமியர்கள் தங்கள் சொத்தில் சில பங்கை சமுதாய மக்களுக்காகவும், பள்ளிவாசல்களின் வருமானத்துக்காகவும், தானமாக வழங்குவது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் வழக்கமாகும். அப்படி வழங்கப்படும் சொத்துக்களை கண்காணித்து நிதி நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல், தர்ஹாக்களில் ஏற்படும் நிர்வாக பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்காக உருவாக்கப்பட்டது தான் வக்பு வாரியம்.

எம்.ஏ.சித்திக் சிறப்பு அதிகாரியாக நியமனம்

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினராக இருந்த ஏ.சிராஜுதீன், அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதையடுத்து வக்பு வாரிய நிர்வாகக் குழுவை கலைத்துவிட்டு தற்காலிக நிர்வாக அதிகாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.  அதன்படி, தமிழக நிதித்துறையின் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக் சிறப்பு அதிகாரியாக கவர்னர் நியமித்து உத்தரவிட்டார்.

சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை இல்லை

இந்நிலையில் வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை கோரி கடையநல்லூர் எம்எல்ஏவும், வக்பு வாரிய உறுப்பினருமான அபுபக்கர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில் காலியாக உள்ள உறுப்பினர்களின் இடங்களை நிரப்பாமல், நிர்வாகக் குழுவை கலைத்துவிட்டு நிர்வாக அதிகாரியை நியமித்ததாக கூறியிருந்தார். மேலும் வக்பு வாரியத்தை கலைக்கும் தமிழக அரசின் முடிவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , தமிழ்நாடு வக்புவாரிய நிர்வாக அதிகாரியாக சித்திக் நியமிக்கப்பட்டதற்கு தடை இல்லை என்றும் அவர் நிர்வாக அதிகாரியாக தொடரலாம் என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Related Stories: