டெல்லி: பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் புறப்பட்டு செல்கிறார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் அங்கம் வகிக்கின்றன. பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாடு பிரேசிலில் நாளையும், நாளை மறுத்தினமும் நடைபெறுவதையொட்டி இன்று பிற்பகல் பிரதமர் மோடி பிரேசிலியா நகருக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த மாநாட்டில் மோடி பங்கேற்பது இது 6வது முறையாகும். எதிர் காலத்திற்கான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து தமது பயணத்தின் போது ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.