உத்தரப்பிரதேச மாநிலம்: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வீதம் 5 ஆண்டுகளுக்கு மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக மகாவீர் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து கோயில் கட்டுவதற்கு பல்வேறு அமைப்புகள் நன்கொடை வழங்க முன்வந்துள்ளன.
அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை அன்று தீர்ப்பு வழங்கியது. அதில், அயோத்தியில் உள்ள குறிப்பிட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட மத்திய அரசு அறக்கட்டளை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த அறக்கட்டளையில் ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், இந்து சமய துறவிகள், விஎச்பி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், ராமர் கோவில் கட்ட மொத்தம் 10 கோடி ரூபாய் வழங்குவதாக மகாவீர் சேவா அறக்கட்டளை அறிவித்துள்ளது. தேவைப்பட்டால் மேலும் நன்கொடை வழங்கவும், ராமஜென்ம பூமிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கவும் தயார் என்று தெரிவித்துள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவை தலைமையிடமாக கொண்ட மகாவீர் சேவா அறக்கட்டளை, முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆச்சார்யா கிஷோர் தலைமையில் செயல்பட்டு வருகிறது.