மதுரை: நடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கில் ஆவணங்களை தாக்கல் செய்ய மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் தனுஷ் தங்களது மகன் என உரிமை கோரி மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர், மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நடிகர் தனுஷ் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நடிகர் தனுஷ், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மேலூர் நீதிமன்றத்திலுள்ள வழக்கை ரத்து செய்தது.
இந்த வழக்கில் நடிகர் தனுஷ், கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளார். எனவே, அவர் மீது குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க ேவண்டுமென மதுரை ஜேஎம் 6ம் நீதிமன்றத்தில் கதிரேசன் மனு செய்திருந்தார். இந்த மனு மாஜிஸ்திரேட் முத்துராமன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கதிரேசன் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான ஒரிஜினல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட மாஜிஸ்திரேட், மனு மீதான விசாரணையை டிச. 10க்கு தள்ளி வைத்தார்.