சாயல்குடி: முதுகுளத்தூரில் சாலையில் திரியும் மாடுகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களும், கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால் நகரில் எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். குறிப்பாக பஸ்ஸ்டாண்ட் சாலை, பஜார் சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் போக்குவரத்து மேலும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டுனர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
அவ்வப்போது சாலைகளில் கால்நடைகள் மிரண்டு ஓடுவதால், பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.