காவல்துறையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு

புதுடெல்லி: தமிழக காவல்துறையுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஒத்துழைப்பதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், சிலைக்கடத்தல் தொடர்பான விசாரணை விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையிடம் ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சிலைக்கடத்தல் வழக்குகள் குறித்து ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், அதற்கு தமிழக அரசு தடை விதித்தது. மேலும் சிலைக்கடத்தல் தொடர்புடைய அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து டிராபிக் ராமசாமி, யானை ராஜேந்திரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்து, ஐ.ஜி பொன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பு வழங்கி, அவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சிலை கடத்தல் தொடா்பாக உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அமல்படுத்தவில்லை எனக்கூறி பொன்.மாணிக்கவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தார். தமிழக அரசுக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories: