சிகோகோ: அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல் அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கப்பட்டது. தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நவம்பர் 8ந்தேதி முதல் 17ந்தேதி வரை அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்காவின் சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன் டி.சி. மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்கிறார்.
அங்கு, தமிழ்நாட்டுக்கான புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து உலக வங்கியின் தெற்காசிய பிரிவின் உயர் அலுவலர்களுடன் விவாதிக்கவும், தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகள் திரட்டுவது குறித்து இண்டர்நேஷனல் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசவும் இந்த பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக கடந்த 8ந்தேதி அதிகாலை துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் சிகாகோ நகரம் சென்றார். அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைந்த ஓ.பன்னீர்செல்வத்தை விமான நிலையத்தில் தமிழ் சங்கம் சார்பில் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிகாகோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சுதாகர் தலேலா தலைமையில் உயர் அதிகாரிகளும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்குள்ள தமிழ் டாக்டர்கள், தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் மரியாதை நிமித்தமாக சிகாகோ விமான நிலையத்துக்கு வந்து ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்றனர். விமான நிலைய வரவேற்பு முடிந்ததும், நேராக சிகாகோ நகரில் உள்ள ‘ஒக்புரூக்’ ஹில்டன் ஓட்டலுக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக தமிழ் சங்கம் சார்பில் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தங்க தமிழ் மகன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.