ஐஎஸ்எல் கால்பந்து முதல் கோல் அடிக்குமா சென்னையின் எப்சி?

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் நடப்பு சீசனில் இதுவரை ஒருகோல் கூட அடிக்காத சென்னை அணி இன்று நடைபெறும் போட்டியிலாவது கோல் அடிக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். ஐஎஸ்எல் தொடரில் 2 முறை கோப்பையை வென்ற அணி சென்னையின் எப்சி. கடந்த ஆண்டு கடைசி இடத்தை பிடித்த நிலையில், இந்த ஆண்டு இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. முதல்போட்டியில் கோவாவிடம் 3-0 என்ற கோல் கணக்கில் தோற்றது.

அடுத்து சென்னையில் நடைபெற்ற 2வது போட்டியில் மும்பை அணியிடம் 0-0 என டிரா செய்தது. தொடர்ந்து 3வது போட்டியில் கொல்கத்தாவிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதுவரை 3 போட்டிகளிலும் சேர்த்து 270 நிமிடங்கள் விளையாடியும் சென்னை அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. அதுமட்டுமல்ல, இந்த தொடரில் ஒரு கோல்  கூட அடிக்காத ஒரே அணியாகவும் சென்னை தொடர்கிறது. இந்நிலையில் இன்று பெங்களூரில் நடைபெறும் 4வது போட்டியில் பெங்களூர் எப்சி அணியுடன் மோத உள்ளது. அந்தப் போட்டியிலாவது முதல் கோலை அடித்து சென்னையின் எப்சி  கணக்கை தொடங்காதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Stories: