தேனி: நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர்களின் பெற்றோர்களுக்கு, நீதிமன்ற காவலை நவ.22ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் உத்தரவிட்டார். மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்ததாக, தேனி அரசு மருத்துவக்கல்லூரி மாணவர் உதித்சூர்யா பிடிபட்டார். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார், மாணவர் உதித்சூர்யா, அவரது தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர். இவர்களைத் தொடர்ந்து மாணவர்கள் பிரவீன், ராகுல், இவர்களின் தந்தைகளான சரவணன், டேவிட், மாணவர் இர்பான், அவரது தந்தை முகமது சபி, மாணவி பிரியங்கா, அவரது தாய் மைனாவதி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றக்காவலில் இருந்து வரும் சரவணன், டேவிட், முகமது சபி, மைனாவதி ஆகியோரின் நீதிமன்றக்காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இவர்கள் நால்வரையும் சிபிசிஐடி போலீசார் நேற்று தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் பன்னீர்செல்வம் 4 பேருக்கும், நவ.22ம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.